ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

பிச்சாவரத்தில் சுற்றுலாத்துறை மூலம் "விடியல் விழா"

கடலூர் :

       பிச்சாவரத்தில் சுற்றுலாத்துறை மூலம் "விடியல் விழா' நடத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் பிச்சாவரம் சுற்றுலா அலுவலகத்தில் நடந்தது.
 
கூட்டத்தில் கலெக்டர் ராஜேந்திர ரத்னு பேசியது:
 

     சிதம்பரம் அருகே அமைந்துள்ள பிச்சாவரம் உலகப்புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாகும். மாங்குரோவ் காடுகள் உள்ள இப்பகுதிக்கு உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். மேலும் சிதம்பரம் சுற்றுப்பகுதியில்தான் உலகிலேயே முதலில் யோகா முறை பின்பற்றப்பட்டது. 18 சித்தர்களும், பதஞ்சலி முனிவர்களும் இங்கு யோகா கலையை வளர்த்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இப்பகுதியை உலகச் சுற்றுலா வரைபடத்தில் இடம்பெறச் செய்ய தமிழ்நாடு சுற்றுலாத் துறை மூலம் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக சுற்றுலாப் பயணிகளை கவரும் வண்ணம் பிச்சாவரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் விடியல் விழா நடத்தப்படவுள்ளது.

         சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்,யோகா வகுப்புகள் நடத்தப்படும். மேலும் அதிகாலை சூரியோதய நிகழ்ச்சியை எம்.ஜி.ஆர்., திட்டு தீவிலிருந்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு காண்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொடக்க விழாவில் அமைச்சர் சிறப்பிக்கவுள்ளார். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் எக்கோ சுற்றுலா இங்கு மேம்படுத்தவும், வருங்காலங்களில் ஆண்டின் அனைத்து நாட்களிலும் சுற்றுலாப் பயணிகள் வருகை தர கலெக்டர், தனியார் சுற்றுலா அமைப்பாளர்கள், 5 நட்சத்திர விடுதி நடத்துனர்கள் மற்றும் யோகா கலை மைய அமைப்பாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு அலுவலர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.சிதம்பரம் கூடுதல் எஸ்.பி., துரை, ஆர்.டி.ஓ., இந்துமதி, பி.ஆர்.ஓ., தமிழ்செல்வராஜன் பங்கேற்றனர்.


Read more...

சனி, 10 டிசம்பர், 2011

கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் தீப தரிசனம்

கடலூர் : 

          மொரீஷியஸ் நாட்டைச் சேர்ந்த 25 சிவனடியார்கள் கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று தீப தரிசனம் செய்தனர்.

           மொரீஷியஸ் நாட்டில் வாழும் தமிழ் வாழ் சிவனடியார்கள் 25 பேர் கடந்த வாரம் முதல் வரும் ஜனவரி 8ம் தேதி வரை 40 நாட்கள் தமிழகத்தில் உள்ள சிவன் கோவில்களில் தீப தரிசனம் செய்ய பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று முன் தினம் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்த அவர்கள், திருக்கோவிலூர் கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில், திருஆமத்தூர் அபிராமேஸ்வரர், திருவெண்ணைநல்லூர், திருவதிகை சிவன் கோவில்களில் தரிசனம் செய்த அவர்கள் நேற்று கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் தீப தரிசனம் செய்தனர்.தொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றனர். ராமேஸ்வரம், கன்னியாகுமரியில் உள்ள சிவன் கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.

Read more...

செவ்வாய், 22 நவம்பர், 2011

சிதம்பரம் சாமியார்பேட்டை கடற்கரையை சுற்றுலாத் தலமாக்க கோரிக்கை

சிதம்பரம்:

         சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை கிராமத்தை சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் என சிதம்பர சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதம்:  

            சிதம்பரம் வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் சாமியார்பேட்டை கிராமம் உள்ளது. இது கடற்கரை ஒட்டிய கிராமமாகும். இப்பகுதியில் தென்னை மரங்கள் நிறைந்த எழில்மிகுந்த கடற்கரை அமைந்துள்ளது. இப்பகுதியைச் சுற்றி பல்வேறு தொழிற்சாலைகள் அமைந்துள்ளதால், தினந்தோறும் திரளான பொதுமக்கள் அங்கு சென்று பொழுதை கழிக்கின்றனர்.  மேலும் அருகே உள்ள கடலூர் பகுதி மக்களும் அதிக எண்ணிக்கையில் வந்து செல்கின்றனர்.

            சாமியார்பேட்டைக்கு செல்ல தரமான சாலை வசதியும், போதிய பஸ்  வசதியும் உள்ளதால், சுற்றுலா தலமாக்குவதற்கான அனைத்து தகுதிகளையும் இந்த கடற்கரை பெற்றுள்ளது. பயணிகள் தங்கும் வகையில் தங்கும் இடங்கள், குளியல் அறைகள், கழிப்பறைகள், உடைமாற்றுவதற்கான தனி அறைகள், குடிநீர் வசதி, மின் இணைப்பு உள்ளிட்டவற்றை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Read more...

சனி, 29 அக்டோபர், 2011

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரிப்பு

சிதம்பரம்:
 
             சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு வெளிநாட்டு பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, சிங்கப்பூர், கனடா, இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். 

              அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வெள்ளிக்கிழமை நடராஜர் கோயிலுக்கு வந்தனர். அவர்கள் கோயில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள், ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை மீது முதலாம் பராந்தக சோழனால் வேயப்பட்ட பொற்கூரை, ஆயிரங்கால் மண்டபம் ஆகியவற்றின் கலைநயத்தை ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மேலும் கோயிலின் வரலாற்றை வழிகாட்டிகள் மூலம் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். 

              அமெரிக்கா, பிரான்ஸ் நாட்டிலிருந்து வரும் பெண்கள் பெரும்பானோர் தமிழக கலாசாரப்படி புடவை கட்டிக்கொண்டு கோயிலுக்கு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற தரிசன திருவிழாவில் பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் புடவை கட்டிக்கொண்டு வலம் வந்தது அனைவரையும் வியக்க வைத்தது.


Read more...

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

கடலூர் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்க புதிய திட்டம்


கடலூர்:

                 சுற்றுலாப் பயணிகள் வருகையை ஊக்குவிக்கும் வகையில், தனியார் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளைத் தங்க வைக்கவும், அவர்களுக்கு நமது கலாசாரத்தைப் பறைசாற்றும் வகையில் உணவு வகைகளை அளிக்கவும் வகை செய்யும் திட்டம், கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி அறிவித்து உள்ளார். 

இது குறித்து ஆட்சியர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               தமிழக முதல்வரின் அறிவுரைப்படி சுற்றுலாத் துறையினரால், தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன், உணவுடன் கூடிய உறைவிடத் திட்டத்தை விரிவு படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதல் இடத்திலும், உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகையில், மூன்றாம் இடத்திலும் உள்ளது. பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி போன்ற பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் வந்து தங்கும், வெளிமாநிலப் பயணிகள் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்து உள்ளது. 

             நடுத்தர சுற்றுலாப் பயணிகளுக்கான தங்குமிட வசதிகள் தற்போது போதுமானதாக இல்லை. எனவே கடலூர் மாவட்டத்துக்கு வருகை தரும் வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, உணவுடன் கூடிய உறைவிடம் அளிக்கும் திட்டம், சுற்றுலாத் துறை மூலம் விரிவு படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் தனியார் தங்கள் வீடுகளில் உள்ள அறைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு அளிக்கலாம். அவ்வாறு தங்கள் வீடுகளில் சுற்றுலாப் பயணிகளை, உணவுடன் தங்க வைக்க விரும்புவோர் தங்கள் பெயர்களை, சுற்றுலாத் துறையில் பதிவுசெய்து கொள்ள வேண்டும். உணவுடன் கூடிய உறைவிடத் திட்டம் பற்றிய கையேடுகளில், விவரங்கள் அளிக்கப்படும். 

இத்திட்டத்தில் சுற்றுலாப் பயணிகளை தங்கள் வீடுகளில் தங்க வைக்க விருப்பம் உள்ளவர்கள், 

சுற்றுலா அலுவலர், 
ரயில்வே ஃபீடர் சாலை, 
சிதம்பரம் (தொலைபேசி எண் 04144- 238739, செல்ஃபோன் 9789055400 ) 

என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.




Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP