வியாழன், 11 நவம்பர், 2010

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் ஆன்மிக சுற்றுலாத் தலமாக மாறுமா?

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபை மேற்கூரையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள்.

நெய்வேலி : 

                    ராமலிங்க அடிகள் வாழ்ந்த வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தை ஆன்மிக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

                   கடலூர் நகரத்திலிருந்து 38 கி.மீ. மேற்கே அமைந்துள்ளது வடலூர். வடலூர் நான்கு முனைசந்திப்பிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ளது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம். இங்கு வள்ளலார் ராமலிங்க அடிகளால் நிறுவப்பட்ட சத்தியஞான சபையும், ஞான சபையை ஒட்டி அணையா அடுப்புடன் கூடிய தருமசாலையும் உள்ளன. இந்த ஞானசபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தன்று 6 காலங்களில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

                            இதைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வள்ளலார் தெய்வ நிலையத்தில் கூடுவார்கள்.இதோடு மட்டுமில்லாமல் வள்ளலார் கரங்களால் தீ மூட்டப்பட்டு, இன்றுவரை அது அணையாமல் அந்த அடுப்பில் உணவுகள் தயார் செய்யப்படுகிறது. பசி என்று வருவோர் பசியைப் போக்க தருமசாலைக்கு வரும் அன்பர்களுக்கு 3 வேளையும் உணவு பரிமாறப்படுகிறது. இது 105 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறுகிறது. 

                     இந்த தருமசாலை வள்ளலாரின் அன்பர்கள் தரும் தானியங்கள் மூலமாகவும், நிதியுதவியின் மூலமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.இத்தகைய சிறப்பு வாய்ந்த வள்ளலார் தெய்வ நிலையத்தில் தற்போது விரிவுபடுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. தைப்பூசத் தரிசனத்தைக் காணவரும் பொதுமக்கள், சிரமமின்றி ஜோதியைக் காண ஞானசபை முன் பிரமாண்டமான மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது. மேலும் வள்ளலார் தெய்வ நிலைய முகப்பிலிருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

                   மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வள்ளலார் தெய்வ நிலையத்தை அழகுப்படுத்தும் திட்டத்தை உருவாக்கி, சுற்றிலும் பூங்கா அமைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதன் முதற்கட்டமாக தனது சொந்த நிதியிலிருந்து 5 லட்சம் நன்கொடை வழங்கியதோடு, என்எல்சி நிறுவனத்தின் உதவியையும் கோரியுள்ளார். இதோடு நில்லாமல் தமிழக சுற்றுலாத் துறையின் மூலம் 68 லட்சம் செலவில் ஞானசபையை சுற்றிலும் சிமென்ட் சாலை, 2 உயர் கோபுர மின்விளக்கு, வடலூர்-விருத்தாசலம் சாலை மார்க்கத்திலிருந்து ஞானசபை வரை தார்சாலை, தருமசாலையை சுற்றிலும் தார்சாலை, ஆழ்குழாய் கிணறு உள்ளிட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

                  இது தவிர்த்து சுற்றுலா வளர்ச்சித் துறையின் மூலம் 2 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெறவுள்ளன. இதன்மூலம் தருமசாலை முன்  1 கோடி செலவில் ஆர்சிசி மண்டபம், தலா 25 லட்சம் செலவில் நூலகம் மற்றும் படிப்பகம், 5 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், வள்ளலார் வரலாற்று கண்காட்சி அரங்கம், ஞானசபை குளம் சுத்தம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளப்படவிருப்பதாக வள்ளலார் தெய்வ நிலைய நிர்வாக அதிகாரி நாகராஜன் தெரிவித்தார்.

                       வள்ளலார் அன்பர்களின் விருப்பங்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றிவரும் அரசு, நூறு ஆண்டுகளை கடந்து இன்றும் சன்மார்க்கத்தை உலகமெலாம் பரப்பிவரும் வள்ளலாரின் கொள்கைகளுக்கு மதிப்பளித்து, வள்ளலார் வாழ்ந்த இடத்தை ஆன்மீக சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பது சன்மார்க்க அன்பர்களின் கோரிக்கையாகும்.

Halloween Comments - http://www.halloweentext.com கடலூர் மாவட்ட செய்திகள்

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP