புதன், 19 ஜனவரி, 2011

பிச்சாவரத்தில் பொங்கல் படகு சவாரி : ரூ. 3.16 லட்சம் வருவாய்

கிள்ளை : 

              சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1.26 லட்சம் ரூபாய் படகு சவாரியில் கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது. 

             கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த பிச்சாவரம் சுற்றுலா மையம் 3,000 ஏக்கர் பரப்பளவில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையில் சதுப்பு நிலத்தாவரங்களால் சூழப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வனங்களைப் பாதுகாக்க தமிழக அரசு சார்பில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. மூலிகைத் தாவரங்கள் நிறைந்த பிச்சாவரம் வனப் பகுதியில் படகில் சென்று வருவதால் மனதுக்கும் உடலுக்கும் இதமான புத்துணர்ச்சி கிடைக்கிறது. 

            இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு பிச்சாவரம் படகு சவாரிக்கு திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை,கோவை, சென்னை உட்பட பெருநகரங்களில் இருந்தும் வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனர். காலை 7 மணி முதல் படகு சவாரிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

              அதிகளவில் பயணிகள் குவிந்ததால் முன்பதிவு செய்து மூன்று மணி நேரம் வரை காத்திருந்து படகு சவாரி செய்தனர். மாலை 6 மணி வரை படகு சவாரிக்கு அனுமதி என்பதால் பகல் 3 மணிக்கு புக்கிங் முடிந்தது. மாலையில் வந்த பல சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கிள்ளையில் இருந்து குறுக்கு வழியாக நாகை மாவட்டம் கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றனர். 

                பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் படகு சவாரியில் மட்டும் 14ம் தேதி 35 ஆயிரம் ரூபாயும், 15ம் தேதி 60 ஆயிரம் ரூபாயும், 16ம் தேதி 91 ஆயிரம் ரூபாயும், நேற்று மதியம் 3 மணிவரை 1.30 லட்சம் ரூபாய் என பொங்கலை முன்னிட்டு 3.16 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 1.26 லட்சம் ரூபாய் கூடுதல் வருவாயாகும்.

0 கருத்துகள்:

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP